Sunday, February 12, 2006

சரித்திரம் படைத்த வானொலிக் கலைஞர்கள்




இலங்கை வானொலி புகழ் 'மதுரக் குரல் மன்னர்' 'மின்னல் வேக மன்னர்' கே.எஸ்.ராஜா அவர்களின் குரலைக் கேட்டு ரசிக்க இங்கே சொடுக்குங்கள்.[ORIGINAL VOICE OF K.S.RAJA]


எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்,எஸ்.ஜானகி பாடிய இடைக் காலப் பாடல்களையும், டி.எம்.எஸ் பாடிய பழைய பாடல்களையும், கவியரசர் கண்ணதாசன் தத்துவப் பாடல்களையும் கேட்டு ரசிக்க இங்கே சொடுக்குங்கள்.


'பல்கலை வித்தகர்' திரு.கே.எஸ். பாலச்சந்திரன்
அவர்களின் இணையத்தளம்.


அமெரிக்காவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தென்றல்' தமிழ் வானொலியைக் கேட்க இங்கே சொடுக்குங்க்ள்.

TO Listen KARAIKAAL TAMIL RADIO


'தினமலர் ' கே.எல்.சாட்டிலைட் ரேடியோ பற்றிய தகவல்கள் அறிய இங்கே சொடுக்குங்கள்.

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இலங்கை வந்திருந்த போது அவர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களுக்கு அளித்த பேட்டியைக் கேட்க ...இங்கே சொடுக்குங்கள்.....

'வானொலிக் கலைஞர்' குயின்டஸ் துரைசிங்கம் அவர்களின் இணையத் தளம்...

கனடா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபன CTBC ஒலிபரப்பைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

'கம்பீரக் குரலோன்' கணேஷ்வரனுக்கு...கண்ணீர் அஞ்சலி.... [ NEW ]


திருமதி ராஜேஸ்வரி சண்முகம் பற்றி 'நேயர் திலகம்' விஜயராம் ஏ. கண்ணன்

திருமதி.விசாலாட்சி ஹமீது

தமிழ் அமுது' கே. நாக பூஷணி

'காந்தக் குரலோன்' எஸ்.ரபீக்

.ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீது,
ராஜ குரு சேனாதிபதி கனகரத்தினம், விசாலாட்சி ஹமீது பற்றி 'ராணி' இதழில் வெளியான கட்டுரை.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு 'தின மலர்' பத்திரிகையில் வெளியான கே.எஸ்.ராஜாவின் சிறப்புப் பேட்டி

இலங்கை சக்தி எப்.எம் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு ரசிக்க இங்கே சொடுக்குங்கள்.

இலங்கை வானொலி நினைவலைகள்

கே.எஸ்.ராஜா வரும் போதே பரபரப்பு...

இலங்கை வானொலி மயில் வாகனன் ,கே.எஸ்.ராஜா...நினைவோட்டம்

அப்துல் ஹமீதை கண்ணீர் பெருக...உருக வைத்த நிகழ்வு

இலங்கை வானொலியில் இப்படிப் படுத்த மாட்டார்கள்

'பொங்கும் பூம்புனல்' தான் அப்போதெல்லாம் எங்களுக்கு சுப்ரபாதம்

'நிலா எப்.எம்' வானொலியைக் கேட்டு ரசிக்க இங்கே சொடுக்குங்கள்...

'ஆனந்த விகடன்' பவழ விழா மலரில் வெளியான பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் சிறப்புக் கட்டுரை...

------ -------- ------

TAMIL SITES

தேன்கூடு

NEW ENGLAND TAMIL SANGAM

MISSOURI TAMIL SANGAM

TAMIL LADIES CIRCLE - ABU DHABI

Connecticut Tamil Sangam

New Jersey Tamil Sangam

NEW YORK TAMIL SANGAM

Tamil Cultural Association at The University of Texas at Austin.

MICHIGAN TAMIL SANGAM

INDONESIA TAMIL MANRAM




யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க...
[TO LISTEN TAMIL OLD SONGS] இங்கே சொடுக்குங்கள்
.


YAZHSUTHAKAR,YAZH SUTHAKAR,YAZHSUTHAHAR, YAZH SUTHAHAR,
YAZHSUDHAKAR,YAZH SUDHAKAR,YAZH SUDHAGAR,YARL SUTHAHAR,YARL SUTHAKAR,YARL SUDHAKAR

TMS SONGS,T.M.SOUNTHARARAJAN SONGS,T.M.SOUNDARARAJAN SONGS,MGR SONGS,SIVAJI SONGS,KANNATHASAN SONGS,KANNADASAN SONGS,SPB TAMIL SONGS,K.J.JESUTHAS TAMIL SONGS,S.JANAKI TAMIL SONGS,S.JANAKI SONGS,TAMIL OLD SONGS,VANI JEYARAM SONGS,VAANI JEYARAM SONGS,KAMAL SONGS

Friday, February 10, 2006

சிவாஜியும், அப்துல் ஹமீதும்...







அடுத்து வரும் தலைமுறைகள் நடிப்பதற்கென்று எந்த ஒரு பாத்திரத்தையும் விட்டு வைக்காது அத்தனை பாத்திரங்களையும் ஏற்று நடித்து அந்த பாத்திரங்களாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.

அந்தப் பாத்திரங்களின் மூலம், நடிக்க வரும் அத்தனை நடிகர்களுக்குமே பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகமாகத் திகழ்பவர் அவர்.சிவாஜியைப் போல் தமிழை அழகாகவும், உணர்வு பூர்வமாகவும் உச்சரித்த நடிகர் இன்றுவரை இல்லை. இனியும் பிறக்கப் போவதில்லை என்றார் கவியரசர் கண்ணதாசன்.

தனக்கொரு இமேஜ் என்கின்ற எல்லை கட்டிக் கொள்ளாமல், குரூபியாய், கொள்ளைக் காரனாய், தொழு நோயாளியாய், மூத்துக் சிதைந்த முதியவராய், அத்தனை பாத்திரங்களையும் ஏற்கத் துணிந்த சிவாஜியின் ஆண்மையை வியக்கின்றேன் என்றார் 'கவிப் பேரரசு' வைரமுத்து.

தமது கொஞ்சு தமிழ்ப் பேச்சால் வானொலி மற்றும் தொலைக்காட்சி நேயர்களைக் கொள்ளை கொண்ட பாட்டுக்குப் பாட்டு பி.எச். அப்துல் ஹமீது அவர்கள்.. சிவாஜி பற்றிய தமது நினைவலைகளை, ஒரு ரசிகனின் பெருமிதத்துடன் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

எனக்குத் தமிழைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பலர் உண்டு.

ஆனால் ஒரு பாமரனும் கூட தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்த ஆசிரியர் அவர்.

பள்ளி நாடகங்களில் நான் நடித்த காலம் தொட்டு வானொலி நாடகங்களில் நடித்தது வரை, வசன உச்சரிப்பிலும், பாவங்களை வெளிப்படுத்துவதிலும் அவரது பாதிப்பே என்னிடம் அதிகமாக இருந்தது.

'பைலட் பிரேம்நாத்' படத்தில் நடிப்பதற்காக அவர் இலங்கை வந்திருந்தபோது எனது மானசீக குருவான நடிகர் திலகத்தை இலங்கை வானொலிக்காகப் பேட்டி காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அன்று தான் அவரை நான் முதன் முதலாகச் சந்தித்தேன்.

கொழும்பு நகரில் கடற்கரையை ஒட்டியிருந்த அந்த மிகப் பெரிய நட்சத்திர ஹோட்டலின் ஐந்தாவது மாடியில், கடலை எதிர்நோக்கி இருந்த உப்பரிகை போன்ற பகுதியிலே நிலா வெளிச்சத்திலே அவர் அமர்ந்திருந்தார்.

அவரை நெருங்கி...'வணக்கம் அண்ணா...'என்று நான் சொன்னதும் எனது கைகளைப் பற்றிக் கொண்டு 'வணக்கம் கேப்டன் சாம்பசிவம்' என்று அவருக்கே உரிய பாணியில் என்னை வரவேற்றார்.

கேப்டன் சாம்பசிவம் என்பது இலங்கை வானொலியில் ஒரு வருட தொடராக நான் தயாரித்து வழங்கிய ஒரு வீடு கோயிலாகிறது என்ற நாடகத்தில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் .

அந்தப் பாத்திரத்தின் பெயர், நடிகர் திலகத்தின் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது என்பதை அறியும்போது சொல்லொணா மகிழ்ச்சியும், அதே சமயம் ஒரு வித நடுக்கமும் என்னுள் பரவியது.

அவர் சொன்னார்...

என் மனைவி உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது நானும் தங்கியிருக்க நேர்ந்தது. அப்போது பொழுது போக்காக இலங்கை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டேன்.

தற்செயலாக உங்கள் ஒரு வீடு கோயிலாகிறது நாடகத்தையும் கேட்டேன்.

அந்த நாடகம் என்னை வெகுவாகக் கவர்ந்ததால், தவறாமல் கேட்கத் தொடங்கினேன்.

அதிலும் நீங்கள் ஏற்று நடித்த கேப்டன் சாம்பசிவம் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது.

அன்று தொடங்கிய எங்கள் நட்பு, அவர் குடும்பத்தினர் அனைவரும் என்னையும் என் குடும்பத்தையும் நேசிக்கும் அளவுக்கு வளர்ந்தது.

ஒரு குடும்பம் ஒற்றுமையாக ஒரு கூட்டுப் பறவைகளாகத் திகழ வேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த அக்கறை.

நடிப்புலகில் எத்தனையோ தலைமுறைகளைக் கண்ட அவர், தன் குடும்பத்துத் தலைமுறைகள் ஒன்றாக வாழ வேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறை உள்ளவராக இருந்தார்.

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று அவர் பாடியது போலவே தன் வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார்.

நடிகர் திலகம் அபாரமான நினைவாற்றல் கொண்டவர்.

அவரை முதன் முதலாகச் சந்தித்தபோது எனது மகனுக்கு ஒரு வயது தான்.அவனைத் தன் மடியிலே வாங்கி வைத்துக் கொண்டு பெயர் என்ன ? என்று கேட்டார்..

சிராஜ் என்று சொன்னேன். அவர் உடனே சிராஜூதீன் தவுலா என்ற வரலாற்று வீரனின் பெயரைக் குறிப்பிட்டு அவனை உச்சிமோந்தார்.

பின்பு, 21 ஆண்டுகள் கழித்து அவரை மீண்டும் சந்தித்தபோது அதே பெயரைச் சொல்லி என் மகனை வரவேற்றார்.

நடிப்புலகில் பலருக்கு நடிப்புக் கல்லூரியாக இருக்கும் கலைக்குரிசில் சிவாஜி கணேசனிடம் நான் காணும் சிறப்பு :

உலகப் புகழ்பெற்ற நடிக மேதைகளில், ஓவர் ஆக்டிங், அண்டர் ஆக்டிங் மற்றும் இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நடிப்பு... என தனித்தனிப் பாணியில் பிரகாசித்தவர்கள் உண்டு.

ஆனால் இந்த மூன்று பாணிகளிலும் நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவராக விளங்கிய நடிகர் உலகிலேயே சிவாஜி ஒருவர் தான்.

சமீபத்தில் நடிகர் நாசர் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் - சிவாஜி அவர்கள் பராசக்தியில் காட்டிய இயல்பான நடிப்பை இன்றுவரை எவராலும் சாதிக்க முடியவில்லை என்று சொன்னதையும் இங்கே நினைத்துப் பார்க்கிறேன்.

நடிகர் திலகம் அவர்களுக்கு பாரதத்தின் பெருமை மிக்க தாதா சாகிப் பால்கே விருது, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம், பிரெஞ்சு அரசின் செவாலியே விருது அனைத்தும் வழங்கப்பட்டதை சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தை முந்திக் கொண்டு இலங்கையில்தான் முதல் மரியாதை விழா எடுத்தோம்.

அந்த விழா அமைப்புக்குழுவிலே நானும் இடம் பெற்றிருந்தது எனது பெரும் பாக்கியம்.

இனப் பிரச்சனையால் சிதறுண்டு போயிருக்கும் அந்த நாட்டிலே, கலைக்கு இன மத மொழி பேதம் கிடையாது என்பதை நிரூபிக்கின்ற வகையில், காமினி பொன்சேகா முதற்கொண்டு சிங்களப் படவுலகின் முன்னணிக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு அந்த விழாவைச் சிறப்பித்தார்கள்.

சிவாஜி மன்னன் அணிந்த மணியைப்போல் முழுக்க முழுக்க தங்கத்திலே செய்து விழா மேடையில் அவருக்குச் சூட்டினோம்.

அந்த கௌரவத்தை பார்த்ததும் நடிகர் திலகம் அவர்கள் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார். சபையோருக்கும் மெய்சிலிர்த்தது.

அதன் பிறகு -சிங்கப்பூரில் சுமார் பத்தாயிரம் பேர் கூடியிருந்த மாபெரும் அரங்கிலே அந்த மகத்தான கலைஞனுக்குப் புகழாரம் சூட்டும் பெருவிழா நடைபெற்றபோது அதைத் தொகுத்து வழங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
(அதற்கு சில ஆண்டுகள் முன்புதான், அதே அரங்கில் முதன் முறையாக நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். அப்போதே அவரை இழந்தவிட்டோம் என்ற வதந்தி காட்டுத்தீ போல உலகெங்கும் பரவியது)

அதே மேடையில் தனக்கே உரிய கம்பீரத்துடனும் சாந்தம் தவழும் புன்னகையுடனும் வந்து நின்ற நடிகர்திலகம்...கோடிக்கணக்கான ரசிக நெஞ்சங்கள் வழங்கிய நல்லாசியும், இறைவன் அருளும்தான் என்னைக் காப்பாற்றின.. என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

அந்த விழாவைச் சிறப்பிக்க வந்திருந்த ஒவ்வொரு பிரமுகரையும் குறிப்பிட்டு அவர் நன்றி தெரிவிக்கும்போது

...இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து பறந்து வந்து என்னை கௌரவிக்க மேடைக்கு வந்திருக்கும் இலங்கை நண்பன் அப்துல் ஹமீதின் அன்பை என்னவென்று சொல்வேன்... என்று சொன்னார்.

நான் உருகிப் போனேன்.

நடிகர் திலகத்தின் இறுதி ஊர்வலத்தை நேர்முக வர்ணனை செய்யுமாறு இலங்கை வானொலி, லண்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் உள்ள 24 மணி நேர தமிழ் சாட்டிலைட் வானொலி நிலையங்கள் என்னைக் கேட்டுக் கொண்டன.

சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் ஆரம்பித்து, பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச் சடங்கு முடியும்வரை அந்த நேர்முக வர்ணனையை கண்ணீரையும் சோகத்தையும் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையில் நான் வழங்க வேண்டியதாயிற்று.

ஒரு கைத்தொலைபேசியை வைத்துக் கொண்டு நேர்முக வர்ணனையை வழங்கிக் கொண்டிருந்தேன்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா போன்றவர்கள் மட்டுமன்றி விஜய் போன்ற இளைய தலைமுறை நடிகர்கள் அனைவருமே அப்பா.. அப்பா என்று அழைத்துக் கதறிய காட்சி என்னை மேலும் நிலை குலைய வைத்தது.

அவரைப் போல் திரையில் சோகத்தைப் பிழிந்து தந்த ஒரு நடிகர் கிடையாது.

அவர் மறைவும் உலகத் தமிழர் இதயங்களில் அந்த அளவுக்கு சோகத்தைப் பிழிந்து தந்தது என்றால் அது மிகையில்லை.

அந்த சோகச் சூழலில், மனம் கசிந்து நான் கொஞ்சம் தடுமாறிய வேளையில் என் கைத்தொலைபேசியை யாரோ திருடிவிட்டார்கள்.

பின்பு, இயக்குனர் கே.எ°.ரவிக்குமாரின் உதவி இயக்குனர் சுப்பிரமணியம், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் தமது கைத்தொலைபேசியைக் கொடுத்து நேர்முக வர்ணனை தடையின்றித் தொடர உதவினர்.

இந்த சிறியேனுக்கும், தமது இதயத்தில் நண்பன் என்ற பெரிய அந்த°தைக் கொடுத்து அழகு பார்த்த என் மானசீக குருவுக்கு, என்னால் கடைசியாகச் செய்ய முடிந்த ஒரு சிறு காணிக்கையாக இந்த நேர்முக வர்ணனை வாய்ப்பை இறைவன் எனக்கு வழங்கினானோ என்னவோ....


செவ்வி கண்டவர்- யாழ் சுதாகர்

பி.எச்.அப்துல் ஹமீதின் சிறப்புப் பேட்டி






பி.எச்.அப்துல் ஹமீதின் சிறப்புப் பேட்டி
-----------------------------------------------------




உலகத்தில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் வானொலி என்ற பெருமையைப் பெற்றதும், உலகத்தமிழ் ரசிக நெஞ்சங்களை வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில் இழுத்து வந்து குழுமியிருக்கச் செய்ததும் இலங்கை வானொலி என்றால் அது மிகையில்லை.


தமிழ் ரசிகனின் வாழ்வில் ஒன்றிப்போனது இலங்கை வானொலி. காலைக் கதிரில் துயிலெழுப்பி... அந்தநாள் ஞாபகங்களை சுருதி மீட்டி... பொங்கும் பூம்புனலாய் பரவசப்படுத்தி... இரவின் மடியில் நாம் தலை சாய்க்கும் வரை நமது அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறது இலங்கை வானொலி.

இத்தகைய சிறப்புப் பெற்ற இலங்கை வானொலியில் ஏறக்குறைய 35 ஆண்டுகள் அறிவிப்பாளராக பணி புரிந்து தமிழ் கூறும் நல்லுலகெங்கும் செம்மையான தமிழ் உச்சரிப்பாலும், வசீகரமான பேச்சினாலும் ரசிக நெஞ்சங்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் திரு.பி.எச்.அப்துல் ஹமீது அவர்களை செவ்விகண்டோம்.

இவர் நமது நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட அறிவிப்பாளர் மட்டுமல்ல... நாடகாசிரியர், இயக்குனர், நடிகர், இன மத மொழி பேதங்களைக் கடந்த ஒரு நல்ல ரசிகர். அத்தோடு படைப்பாளிகள் நல்ல
ஒழுக்கசீலர்களாய்இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமான மனிதர் என இவரைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்...... இதோ அவர் வழங்கிய செவ்வி .

பாட்டுக்குப்பாட்டு என்ற இலைமறைகாயாக இருக்கும் கலைஞர்களை இனம் கண்டுபிடிக்கும் நிகழ்ச்சியின் பிதாமகர் நீங்கள். இலங்கை வானொலியில் உருவாகி வெற்றிக் கொடி கட்டிய இந் நிகழ்ச்சியை தனியார் தொலைக் காட்சிகளும் கூட பிற இந்திய மொழிகளிலும் தத்தெடுத்துக் கொண்டன.

இதன் வெற்றியைப் பார்த்து அதை படைத்த ஒரு தாயின் பெருமிதத்தோடு உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன்....

அப்துல் ஹமீது - இந்த நிகழ்ச்சியை இலங்கை வானொலியில் ஆரம்பித்து சுமார் 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்குள்ளே ஒரு மனக்குறை இருந்து வந்தது. இந்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியின் மூலம் ஒரு அப்துல் ஹமீதை இனங்காண்கிறார்கள் என்பதை என்னை குறைத்து மதிப்பிடுவதைப்போல எண்ணினேன்.

காரணம்... இலங்கை வானொலியில் வயதில் மிகக் குறைந்த அறிவிப்பாளனாக மிக இளம் வயதிலேயே இணைந்த போதே வெறும் அறிவிப்புகளோடு மட்டுமே நின்றுவிடாமல் ஒலிபரப்பிலே உள்ள பல துறைகளையும் கற்றுணரn வண்டும் என்ற உந்துதல் அந்த வயதிலேயே இருந்தது.

ஆகவே நான் இலக்கியத் துறை சார்ந்த சஞ்சிகை நிகழ்ச்சிகள், பொது அறிவு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், செய்தித் தொகுப்புகள், நான் இயக்கிய மிகச் சிறந்த நாடகங்கள் என பல நிகழ்ச்சிகள் இருக்கும் போது இந்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியால் மட்டுமே என்னை அடையாளம் காண்கிறார்களே என்ற மனக்குறைதான் அது. இந்தப் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை ஏன் ஆரம்பித்தேன் .

என்றால் அன்று நானே விரும்பி ஏற்றுக்கொண்ட வேலைப்பளுவில் இருந்து என்னை விடுவித்துக் கொள்வதற்காகவே. இரண்டே இரண்டு கலைஞர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஈழத்துப் பாடகர்களான வி. முத்தழகு, கலாவதி சின்னச்சாமி ஆகியோர்களுடன் இந்நிகழ்ச்சியை பரீட்சார்த்தமாக முயற்சித்தேன்.

குளியலறை சங்கீத ஞானம் கொண்டவர்களின் திறமையை வெளிக்கொணர்வதற்காக நான் தயாரித்த இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடைந்ததோடு மட்டுமல்லாமல் விளம்பாதாரர்களும் மனமுவந்து உற்சாக வரவேற்பளித்தனர்.

இதன் பிறகு பல பாகங்களுக்கும் சென்று கலைஞர்களை நேரடியாக சந்தித்து இந்த நிகழ்ச்சியை ரசிகர்களை வெகுவாகக் கவரும் நிகழ்ச்சியாக மாற்றினேன்.

ஆனால் தமிழகத்திலும் இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடையும் என்று நான் நினைக்கவில்லை. பல தனியார் தொலைக் காட்சிகள் இந்தியாவில்ஆரம்பிக்கப்பட்டன. அதில் இந்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை அந்தாக்ஷரி, பாடுவோர் பாடலாம் என்று பல பெயர்களில் புகழ் பெற்ற பாடகர்களைக் கொண்டே முயன்றார்கள்.

இவ்வேளையில் திரு. ரமேஷ் பிரபா அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தவரை வைத்தேநடத்தினால் என்ன? என்று முதன் முதலில் வானொலிக்காக தினமலர் பத்திரிகை சார்பில் சென்னையிலும் கோயம்புத்தூரிலும் ஒலிப்பதிவு செய்து இலங்கை வானொலியின் தென்னிந்திய சேவையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

பின் சன் தொலைக்காட்சியிலும் இந்த நிகழ்ச்சியைக் கொண்டு வரவேண்டும் என திரு. ரமேஷ் பிரபா அவர்கள் முயற்சித்த போது வானொலியை என்னால் மறக்க இயலாது... வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் சேர்த்தே இதை யார் தயாரிக்க முன் வருகிறார்களோ அப்போது என்னால் ஒத்துழைக்க இயலும் என்று நான் சொன்னேன்.

அப்போது சென்னையில் புகழ் பெற்ற லலிதா நகைமாளிகையினர் இந்த நிகழ்ச்சியை தயாரிக்க முன் வந்தனர். லலிதாவின் பேராதரவோடு தொடர்ந்து 6 வருடங்களைக் கடந்திருக்கிறோம் என்பது மட்டுமல்லாது வானொலியிலும் தொலைக்காட்சியிலும் தென்கிழக்காசியாவிலேயே ஒலிபரப்பான, ஒளிபரப்பான முதல் நிகழ்ச்சி பாட்டுக்குப் பாட்டுத்தான் என்பது என்னை மிகவும் பெருமிதம் கொள்ள வைக்கின்றது.

நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சியின் அபிமானம் பெருகிக்கொண்டே வருகிறது. சகல தரப்பு மக்களும் இதில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். பதிவு செய்கின்ற நேரத்தில் கூட்டம் அரங்குகளில் நிரம்பி வழிகின்றது. மக்களின் பேராதரவு சில சமயங்களில் என்னை திக்குமுக்காடச் செய்கின்றது.

இந்த நிகழ்ச்சி மூலமாக என்னை இனம் காண்பதில் எனக்கிருந்த மனக்குறை நீங்கி, அதுவே எனக்கு மனநிறைவு தருவதாகவும்... இன்று புலம் பெயர்ந்து வாழும் தமிழர் மத்தியிலும் தமிழைக் கற்றுக் கொள்வதற்கான ஒரு ஊடகமாக இந்த பாட்டுக்குப் பாட்டு திகழ்வதைக் கண்டும் இந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியவன் என்ற வகையில் பரிபூரணமான மன நிறைவு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும் கூட இலங்கை வானொலியின் பக்கம் ரசிகர்களை ஈர்க்கவைத்த எஸ்.பி. மயில்வாகனன் அவர்களோடு நீங்கள் பணிபுரிந்த பசுமையான நினைவுகளை ரசிகனுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்?....

ஹமீது - மயில்வாகனன் அவர்கள் இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் இணைந்த பிறகுதான், கடல் கடந்தும் கூட இலங்கை வானொலியின் பெருமை உயர்ந்தது. தமிழகத்திலே அன்றைக்கு இருந்த நான்கு கோடி மக்களும் விரும்பிக் கேட்ட ஒரே வானொலி என்ற அந்தஸ்திற்கு இலங்கை வானொலியை உயர்த்திவர் அவர்தான்.

வெறும் சினிமாப் பாடல்களை மட்டும் ஆதாரமாகக் கொண்ட ஒரு வர்த்தக சேவையிலே, வித்தியாசமான நிகழ்ச்சி வடிவங்கள், வித்தியாசமான அறிவிப்பு முறை என்ற மாற்றங்கள் மயில்வாகனன் என்பவரால்தான் இந்த அளவுக்குப் புகழ்பெற்றது.

குறிப்பாக, சினிமா வட்டாரத்தில் மிகவும்புகழ் பெற்றவராக அவர் விளங்கினார்.

அன்றைக்கு வெளிவந்த ஒரு திரைப்படத்தில்கூட மயில்வாகனன் அவர்களைப்பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.' நான் கண்ட சொர்க்கம்' என்ற திரைப்படத்தில் நடிகர் தங்கவேலு அவர்கள் எமலோகம் செல்வதாக வரும் காட்சியில் அவர் எமனோடு உரையாடும்போது அங்கிருந்த வானொலியில் மயில்வாகனின் குரல் கம்பீரமாக கணீரென்று ஒலிக்கும்.
அப்போது அடடா மயில்வாகனன் இங்கே கூட வந்துவிட்டாரா?! என்று தங்கவேலு சொல்வார்.

மிகச்சிறிய வயதிலேயே வானொலியின் சிறுவர் மலரில் ஆரம்பித்து நாடகங்களிலெல்லாம் நிலையக்கலைஞனாக நடித்திருந்தாலும், 1967 ம் ஆண்டிலேதான் நான் அறிவிப்பாளனாக இலங்கை வானொலியில் எனது சேவையை ஆரம்பித்தேன்.

அந்த நேரத்தில் வயதில் மிகவும் மூத்தவரான மயில்வாகனன் அவர்கள் ஒரு நண்பனைப் போல மாணவப் பருவத்திலே எப்படி இருப்போமோ அவ்வளவு தூரம்அந்நியோன்னியமாகப் பழகினார்.

என்னை மட்டுமல்லாமல் என்னோடு இணைந்த சக அறிவிப்பாளர்களையும் கூட தட்டிக்கொடுத்து வளர்த்துவிட்டவர் அவர்.

வானொலி நிலையத்திற்கு வெளியில் நான் நாடகமன்றம் ஒன்றை ஆரம்பித்தபோது கூட எனக்கும் என் நண்பர்களுக்கும் காரியாலயமாகப் பயன்படுத்த தமது இல்லத்தையே வழங்கி எங்களை உற்சாகப் படுத்தினார்.
தம்மையும் ஒரு இளைஞனாக மாற்றிக்கொண்டு எம்மை ஊக்குவித்த மாமனிதர் அவர்.

உங்கள் குரல் இளமையின் ரகசியம் என்ன?

ஹமீது- ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நான் நிற்காமல் பல்வேறு அம்சங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும், தற்கால விஞ்ஞான மாற்றங்களை உள் வாங்கிக் கொண்டு அதற்குத் தகுந்தாற்போல நிகழ்ச்சிகளை வடிவமைக்க வேண்டும் என்றும்... ஒரு மாணவ சிந்தனையோடு இன்றுவரை கற்றல் நிலையிலேயே நான் காணப்படுவதால் உள்ளத்தளவில் நான் இளைஞனாக இருக்கிறேன்.

அகத்தின் அழகு குரலில் தெரியும் என்பதால் முடிந்தவரையிலும் என்னுடைய அகத்தை சுத்தமாக வைத்திருக்கிறேன். மொழியை நேசித்தல் என்பது பெற்ற தாயை நேசிப்பதற்கு சமம்.

என்னைப்பொறுத்தவரையில் தாய்மொழி என்பது, தந்தை பேசிய மொழியோ அல்லது தாய் பேசிய மொழியோ அல்ல.

குழந்தை முதன் முதலில் பேசிய மொழி.

ஆகவே நான் முதன் முதலில் பேசிய மொழி தமிழ்.

அதன் பால் அளவு கடந்த நேசம் வைத்துள்ளதால் வார்த்தைகளை கூட கடித்துக் குதறாமல் கேட்பவருடைய காதுகளை இம்சை செய்யாமல் அழகாக வார்த்தைகளை உச்சரிக்கக்கூடிய ஒரு பக்குவம் வரும்.

ஆகவே கால மாற்றங்களை கருத்தில் கொண்டு புதிய தொழில் நுட்ப யுக்தியோடு நிகழ்ச்சிகளை தயாரித்து மொழியை நேசித்து நாம் அறிவிப்புச் செய்கின்றபோது எவர் குரலும் எந்தவயதிலும் இனிமையானதாகத்தான் இருக்கும்.

ஒப்பிடுங்கள்......அறிவிப்பாளர் ஹமீது, நிகழ்ச்சி அமைப்பாளர் ஹமீது, நடிகர் ஹமீது, ரசிகன் ஹமீது ...?

ஹமீது- எனக்கு மிகவும் பிடித்ததை முதலில் சொல்கிறேன். ரசிகன் ஹமீது ...
எதனையும் நன்றாக ரசிக்கத் தெரிந்தவன் தான் நல்ல ரசனையோடு அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லமுடியும்.

சிறு வயது முதலே நான் ஒரு நல்ல ரசிகன். ரவிசங்கரின் சித்தார் என்றாலும், ஹரி பிரசாத் சௌரஷியாவின் புல்லாங்குழல் என்றாலும், கர்நாடக சங்கீதமென்றாலும், துள்ளிசையாக இருந்தாலும் எல்லா வகையான இசை வடிவங்களையும் நான் நன்றாக ரசிப்பேன்.

வானொலி அறிவிப்பாளர் ஹமீது - வானொலி என்பது என்னுடைய தாய்வீடு. கலைத்துறையில் என்னை உருவாக்கி வளர்த்த வானொலிக்கு நான் மிகவும் கடமைப் பட்டவன்.

நடிகர் ஹமீது - நான் வானொலிக்கு வருவதற்கு முன்னரே என்னுடைய பள்ளிக்கூட நாட்களில் 8 வயதில் முதன் முதலாக மேடையேறியிருக்கிறேன். நிறைய நாடகங்களை வானொலியிலும், மேடையிலும் நெறியாள்கை செய்து தயாரித்து இருக்கிறேன்.

விசேஷமாக சொல்வதென்றால் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது அதன் கலை நிகழ்ச்சிகளின் நிறைவு நாளன்று மூன்று நாடகங்களை தேர்வு செய்தார்கள்.

அதில் முழுக்க முழுக்க பெண்களை வைத்து நெறிப்படுத்திய இராவணேஸ்வரனுடைய கதையை அரங்கு நிரம்பி வழிய யாழ் வீரசிங்கம் மண்டபத்திலே நான் மேடையேற்றியது, இன்றும் என் அடி மனதில் பசுமையாக இருக்கிறது.

மிக இளம் வயதிலேயே ஜான்சிராணியாக நான் நடித்திருக்கிறேன்.

தமிழகத்திலே வீரபாண்டிய கட்டப்பொம்மன், கர்ணன் போன்ற திரைப்படங்கள்வருவதற்கு முன்னரே நான் கட்டப்பொம்மனாகவும், கர்ணனாகவும் வேடமேற்று நாடகங்களில் நடித்திருக்கின்றேன்.

பின்பு அறிவிப்பாளனாக மாறிய பிறகு கூட இசையும் கதையும் என்ற நிகழ்ச்சி எனக்கு மிதவும் வரவேற்பளித்திருக்கிறது.

பின்னர் நானே தயாரித்த நாடகம் தான் கோமாளிகள். அது வானொலியில் 3 1/2 ஆண்டுகள் ஒலிபரப்பாகியது. அந்த வரவேற்பைப் பார்த்ததும் நண்பர் ஒருவர் திரைப்படமாக தயாரிக்க முன்வந்தபோது 1 மாதத்தில் அதன் படப்பிடிப்பை முடித்தோம். அதில் ஐயர் வேடத்தில் நான் நடித்திருந்தேன்.

பின்னர் நீண்ட இடைவேளைக்குப்பின் இசைப்பயணம் என்றொரு திரைப்படத்துக்காக இலங்கையிலேயே படப்பிடிப்பை நடத்த தமிழகக் கலைஞர்கள் வந்த போது அப்துல் ஹமீதாக அதில் நடித்திருக்கிறேன்.

பின்பு சூர்யோதயம் என்ற பெயரில் இத் திரைப்படம் வெளியானது. இதன் பிறகு நண்பர் கமலஹாசனுடைய அன்பு வேண்டுகோளுக்கிணங்க தெனாலியில் அப்துல் ஹமீதாகவே நடித்தேன்.

உங்கள் பார்வையில் இலங்கை ரசிகர்கள் மற்றும் அவர்களோடு ஏற்பட்ட மறக்கமுடியாத சம்பவங்கள்?...

ஹமீது- இலங்கை ரசிகர்கள்துள்ளிசை, டப்பாங்குத்து போன்ற பாடல்களை விட நல்ல மெட்டமைப்புடன் கூடிய பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.

யார் பாடுகிறார்கள் என்பதற்கும், யார் இசையமைத்திருக்கிறார்கள் என்பதற்கும் அதிக முக்கியத்துவம் தராமல்... நல்ல கற்பனை வளம் நிறைந்த தரமான பாடல்களை ரசிப்பதில் தொன்று தொட்டு இலங்கை ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மறக்க முடியாத சம்பவம் என்று கூறும்போது, நிறைய பேசிக்கொண்டே போகலாம். ஆனாலும் குறிப்பிட்ட ஒன்றை மட்டும் சொல்கிறேன்.

இது திருகோண மலையில் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியின் போது நடைபெற்றது.

பெரும்பாலும் போடடியின் முன்பே ஓரளவு சுருதியுடனும் தாள ஞானத்துடனும் பாடுபவர்களை தேர்வு செய்துவிடுவோம். ஆனால் யாருடன் யாரை போட்டியிட வைப்பது என்பதை இறுதி நேரத்தில்தான் மேடையில் தீர்மானிப்போம்.
நிகழ்ச்சியின் இனிமைக்காக ஒரு ஆண் போட்டியாளரையும், ஒரு பெண் போட்டியாளரையும் அழைப்போம்.

அப்போது ஆணை அவரது அபிமான பாடலை பாடச்சொன்னேன். அவர் ஒரு சோகப் பாடலை பாடினார்.

பிறகு அந்தப் பெண்ணை அபிமான பாடலை பாடச்சொன்னேன். அவரும் ஒரு சோகப்பாடலையே பாடினார்.

இரண்டுமே காதல் தோல்வியை பிரதிபலிக்கும் பாடல்கள்!

அதன் பிறகு குறிப்பிட்ட எழுத்துக்களை நான் சொன்ன போதும் காதல் தோல்விப் பாடல்களே மாறிமாறி ஒலித்தன.

என்ன பொருத்தம் இந்த பொருத்தம் ! என்றெல்லாம் நகைச்சுவையாக சொல்லிவிட்டு நான் தற்செயலாக திரும்பிப்பார்த்தபோது இருவர் கண்களிலும் தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

பிறகு எனக்கே சங்கடமாகிப்போய் நிகழ்ச்சியை முடித்துவிட்டேன்.

பிறகு அந்த மேடையிலிருந்த அந்த ஊரைந்சேர்ந்த நண்பர்கள் என்னிடம் அவர்கள் இருவரும் காதலர்கள்.

பல வருடம் காதலித்தும் வாழ்வில் இணையமுடியாமல் வேறு வேறு இடங்களிலே திருமணம் முடித்துக்கொண்டவர்கள்.

நீண்ட நாட்களின் பின்னால் இந்த மேடையிலேஅவர்கள் உங்கள் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மூலம் தங்களை சற்று ஆசுவாசப்படுத்தியிருக்கின்றார்கள் என்று சொன்னதும் அவர்களை எண்ணி என் நெஞ்சம் கனத்துப்போனது.

இந்தியாவிலிருந்து வந்து உங்களை பெருமிதப்படுத்திய விமர்சனங்கள்?.....

ஹமீது- இலங்கை வானொலியில்ஒலிபரப்பாகிய ஒரு வீடு கோயிலாகிறது நாடகத்தை நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் தொடர்ந்து கேட்டிருக்கின்றார்.

ஒரு முறை வானொலி பேட்டிக்காக அவரை சந்தித்தபோது இலங்கை வானொலியிலிருந்து என்னை பேட்டிகாண வந்தததை விட உங்களுடைய நாடகங்களையும் வானொலியின் இதர நிகழ்ச்சிகளையும்மிகவும் விரும்பி ரசிக்கும் ரசிகன் என்ற முறையில் உங்களுக்கு பதிலளிக்க மிகந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்று சொன்னது என்னை மிகவும் பூரிக்கச்செய்தது.

பிரபல நாவலாசிரியர் பாலகுமாரன் அவர்கள் 'பெண்மணி' என்ற இதழில் என் ஞாயிற்றுக் கிழமை காலைப்பொழுதை திரு. அப்துல் ஹமீது அவர்கள் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மூலம் கொள்ளை அடித்துவிடுகிறார். நான் மட்டுமல்ல சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியிருக்கின்றது இந்த நிகழ்ச்சி என்று குறிப்பிட்டிருந்தார்.

திரையுலகில் எம்.ஜி.ஆர் - சிவாஜி மாதிரி அறிவிப்புலகில் ஹமீது - ராஜா என்றொரு ஆரோக்கியமான போட்டி ஒரு காலத்தில் நிலவியது. இந்தப் போட்டியின் மத்தியில் உங்கள் நட்பு எப்படி இருந்தது?

ஹமீது- அதை போட்டி என்று சொல்ல மாட்டேன்.

ஆரோக்கியமான நட்புதான் நிலவியது.

அவருக்கு வர வேண்டிய சந்தர்ப்பம் அவருக்கும், எனக்கு வர வேண்டிய சந்தர்ப்பம் எனக்கும் இறைவனால் கொடுக்கப்பட்டது.

அறிவிப்புப் பாணியில் பல விதமான வித்தைகளை அவர் கையாண்டார். அதில் வெற்றியும் பெற்றார்.

பகுதி நேர அறிவிப்பாளராக இருந்தாலும் குறுகிய காலத்தில் அவர் பிரபலமானார்.

அவர் இருக்கின்ற இடத்தில் சிரிப்பொலிக்கு பஞ்சமில்லை.

நானும் அவரும் சேர்ந்து பல நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக பயணம் செய்திருக்கின்றோம்.

ஒரே நாளில் காலையில் அவருடைய நிகழ்ச்சி மாலையில் என்னுடைய நிகழ்ச்சி என்றெல்லாம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றிருக்கின்றது.

என்னிலும் வயதில் மூத்தவரான அவருக்கும் எனக்குமிடையிலான நட்பு நன்றாகவே இருந்திருக்கின்றது.

[இலங்கைத் தமிழ் நெஞ்சங்களின் கலாச்சார பிரதிபலிப்பை வெளிக்கொணரும் ஒரு ஊடகமாக இலங்கை வானொலி பணிபுரிந்திருக்கின்றது என்றால் அதில் மிகையன்று.

நம் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டு நமது காயங்களுக்குக் கூட மருந்திட்டுச் சென்றிருக்கின்றது இலங்கை வானொலி.

காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் பள்ளிக்கூடம் பள்ளிமுடிந்தவுடன் டியூஷன் பரீட்சை முடிந்தவுடன் பொறியியலாளர், கணக்கர், வைத்தியர், வக்கீல், வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டு வாழ்க்கை என ஒரு வட்டத்திற்குள்ளேயே சுழன்று சொந்தமாய் அதிக படைப்புகளை உருவாக்கவும் உணர்ந்து கொள்ளவும்

நேரமற்றுப் போன ஒரு சமுதாயத்தின் மத்தியிலும் பல எழுச்சிகளை ஏற்படுத்தியிருக்கின்றது இலங்கை வானொலி - உதயா ]

செவ்வி கண்டு எழுதியவர்- இசையமைப்பாளர் உதயா

ரேடியோ சிலோன் சுந்தா ....


சிநேகமாய் ஒலிக்கும் சுந்தரக்குரல் .....
------------------------------------------------

ரேடியோ சிலோன் சுந்தா ....
---------------------------------



தனி மனித வாழ்வில் எங்கே ஒரு சம்பவம் நிகழ்ந்தாலும் அங்கே என் பாடல் ஒன்று ஒலிக்கும் என்றார் கவியரசர் கண்ணதாசன்.

அதேபோல ....ஈழத்து ரசிகர்களைப் பொறுத்தவரை......அவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிக் கலந்து அவர்கள் உணர்வுகளையும் கனவுகளையும் சிநேகமாய் வருடிக் கொடுத்ததில் இலங்கை வானொலி வகித்த பங்களிப்பை வெறும் வார்த்தைகளால் மட்டும் விளக்கி விட முடியுமா?

இலங்கை வானொலியை ஆய்ந்து .... அறிந்து ....உணர்ந்து .... தெளிந்து .... ரசித்த சுகமான அந்த நினைவலைகளை மறுபடியும் மறுபடியும் அசை மீட்கத் தெரிந்த இலங்கை ரசிகர்களுக்கு மட்டுமே அந்த அருமை பெருமையின் ஆழம் புரியும்.

அத்தகைய சிலோன் ரேடியோவில் கணீரென்ற குரலாலும், அழகுத் தமிழ் உச்சரிப்பாலும், நடிகராகவும், அறிவிப்பாளராகவும் நேயர்களை வசப்படுத்தி.... வானொலியின் வரலாற்றுப் பக்கங்களில் தனி முத்திரையைப் பதித்தவர்.... ப, ரேடியோ சிலோன் சுந்தா என அழைக்கப்படும் ஒலிபரப்பாளர் திரு. வீ. சுந்தரலிங்கம் அவர்கள் .

இவரது செம்மையான உச்சரிப்பில் உலாவந்த செய்தி வாசிப்பையும், நேர்த்தி மிக்க நேர்முக வர்ணனைகளையும், கீர்த்திமிக்க இசைத் தொகுப்பு நிகழ்ச்சிகளையும், பாய்ந்து வரும் சிங்கம் என பலன் தருவது டியுறோல் போன்ற பளபளப்பான விளம்பரங்களையும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா என்ன?

இன்னும் ... இன்னும் .... எத்தனை நினைவலைகள் ?....நேயர்களை சிந்திக்க வைத்த பஞ்சபாணம், விவேகச் சக்கரம் போன்ற நிகழ்ச்சிகளிலும் நம்மோடு சிநேகமாக உறவாடிய அந்த சிங்காரக் குரல் .... அரை நூற்றாண்டுக்கு மேலாக வசந்தத் தமிழ் வாசனையை வான் அலைகளில் பரப்பியது.

இலங்கை ரசிகர்களை மட்டுமல்ல தென்னிந்திய வானொலி ரசிகர்களையும் வசீகரித்த திரு. சுந்தா அவர்கள் எழுதிய 'மன ஓசை' என்ற நூலில் இருந்து ஒரு பகுதியை ரசிகன் வாசகர்களுக்காக இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

வானொலியில் நேர்முக வர்ணனைகள் எங்கள் காலத்தில் மிகவும் பிரபலமானதொரு நிகழ்ச்சி.

தொலைக்காட்சி வராத காலம். முழுக்க முழுக்க மக்கள் வானொலி வர்ணனைகளையே கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொரு கணமும் விழிப்பு, விழிப்பு, விழிப்பு, விரைந்து நுண்மதியுடன் செயற்படும் ஆற்றல், சுய பொறுப்புணர்வு-இவையே நல்ல ஒரு ஒலிபரப்பாளனாவதற்கு இன்றியமையாத அடிப்படைகள் என்பதனையே இந்த அனுபவங்கள் எல்லாம் எமக்கு உணர்த்தி நின்றன.

இந்த அனுபவக் களத்திடை வானொலி வர்ணனைகளின் போதும் சில வேளைகளில் பிழைகள் வந்து சேரும். இவற்றை உடனுக்குடன் ஈடுசெய்ய முடியாமலிருக்கும் விளைவாக நிகழ்ச்சி முடிய பத்திரிகைகளின் கிண்டல் கேலிகளைச் சந்திக்க நேரிடும். இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

நான் வானொலியில் இணைவதற்கு முன்னால் கூட இவ்வாறே வர்ணனைகள் தொடர்பான கஷ்டங்களைப் பார்த்திருக்கிறேன்.
இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவின் இறுதி ஊர்வல வர்ணனை நடந்து கொண்டிருந்தது.

காட்சியை வர்ணித்த அறிவிப்பாளர் உணர்ச்சி மேலிட ஒப்புமை தேடி மிதிலைக் காட்சி போல என்று விளாசி விட்டார். இறுதி ஊர்வலத்தை மிதிலைக் காட்சியுடன் ஒப்பிடுவதா?

மறுநாள் காலை பத்திரிகையில் விமர்சனங்கள்....இதுபோலவே பிரிட்டிஷ் மகாராணியார் இலங்கை விஜயத்தின் போதான வர்ணனையிலும் சுவார°யமான சங்கதிகள்.

ஆபரணங்கள் ஏதும் அணியாமல் எளிமையான வெள்ளையுடுப்பில் வருகிறார் என்று சொல்ல நினைத்த வர்ணனையாளர், வாய் தடுமாறி ஆடை ஆபரணங்கள் இல்லாமல் மகாராணியார் அழகாக வருகின்றார் என்று வர்ணித்துவிட்டார்.

எப்படி இருக்கும்? பத்திரிகைகள் சும்மா விடுமா?

ஒருவிதத்தில் பத்திரிகை கண்டனங்கள் அவசியமும் கூட. அவை எமது எச்சரிக்கை உணர்வினுக்கு துணை செய்தன.

இத்தனை அனுபவ விழிப்புடனும் வர்ணனைகளிலே அதீத உணர்ச்சிக்குள்ளாகி விமர்சனங்களை எதிர்கொண்ட அனுபவம் ஒன்று எனக்கும் நேர்ந்ததை இங்கு குறிப்பிட வேண்டும்.

மறைந்த பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவின் உருவச் சிலை திறப்பு விழா வைபவம் பாராளுமன்ற வளாகத்தில் நடந்து கொண்டிருந்தது.

டி.எஸ். சேனநாயக்கா அவர்களின் புதல்வர் டட்லி சேனநாயக்கா தந்தையின் சிலைக்கு மாலை அணிவிப்பதாக ஏற்பாடு.

இந்த நிகழ்ச்சியை பார்த்த வேளை வர்ணனையாளராக இருந்த என் மனதில் எனது தந்தையார் பற்றிய நினைவுகள் விஸ்வரூப தரிசனமாகியிருக்க வேண்டும்.

மகன் தந்தைக்கு ஆற்றும் இந்த மலர் ஆராதனைப் பற்றி குறிப்பிடும் போது மிகை உணர்ச்சியுடன் அதிகமாகவே கதைத்து விட்டேன்.

நிகழ்ச்சி முடிந்து திரும்பி நிலையத்துக்கு வந்தபோது எனது சகா ஒருவர் உனது நடிப்பு நன்றாக இருந்தது என்று கேலி செய்தார்.

என்னுடைய அன்றைய மனநிலையை அவர் அறிய நியாயமில்லை. அந்த வகையில் அவர் கேலி செய்தது சரிதான். என்னைப் பொறுத்தவரை , இது ஒரு நல்ல பாடமாக இருந்தது.

அதாவது வர்ணனைகள் செய்யும்போது சொந்த உணர்ச்சிகளுக்கு இடம் தரக்கூடாது. நிகழ்வுகளை தெளிவாக - அழகாக , கேட்கும் நேயர்களின் அகத்திரைக்குக் கொண்டுவந்து விடுவதே எமது முக்கிய கடமையாகும்.

இந்த அனுபவ பாடங்கள்தான் பின்னால் ஒரு நல்ல வர்ணனையாளனாக நான் பாராட்டுப் பெற வழிவகுத்தன.

என் ஒலிபரப்பு அனுபவக் களத்திடை மகிழ்ச்சியும் புகழும் தேடித்தந்த அப்போலோ வர்ணனை பற்றிய நினைவுகள் என்றும் இனிமையானவை.

அப்பொழுது நான் இலங்கை வானொலியிருந்து இலங்கை பாராளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.

அன்றைய இலங்கை வானொலி இயக்குனர் நாயகம்(டைரக்டர் ஜெனரல்) நெவில் ஜயவீர அவர்களிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது.

சந்திர மண்டலத்துக்கு மனிதன் பயணிக்கப் போகின்றான்.
வாய்ஸ் ஓப் அமெரிக்கா என்ற அமெரிக்க வானொலி நிலையம் தொடர்ச்சியாக (மூன்று, நான்கு நாட்கள்)வர்ணனை செய்ய உள்ளது. வாய்ஸ் ஓப் அமெரிக்கா ஒலிபரப்பை இயர்போன் மூலம் காதில் வாங்கியபடி உடனடியாக தமிழிலும் சிங்களத்திலும் தாமுடியுமா என்று அவர் கேட்டார்.

என்னோடு பாராளுமன்றத்தில் இருந்த சிங்கள அறிவிப்பாளர் அல்பிரட்டும் கூட இருந்தார்.

பெரியதொரு சவாலாக இது எமக்கு இருந்தது.

இரண்டு பேருமே நிச்சயம் முடியும் என்று உறுதி கூறினோம்.

அவர் உடனேயே ஏற்பாடு பண்ணி எங்களை கொழும்பிலே உள்ள அமெரிக்கன் தூதரகத்திற்கு அனுப்பி வைத்தார்.

ஏற்கனவே இத்திட்டம் போல ஜெமினி என்றொரு விண்வெளிக் கலத்தை வானுக்கு அனுப்பிப் பரீட்சித்துப் பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. அதற்குரிய படங்களையெல்லாம் அவர்கள் திரைப்படங்களாக வைத்திருந்தார்கள். அவர்களே ஏற்பாடு பண்ணி எங்கள் இருவருக்குமாக அவற்றைத் திரையிட வைத்தார்கள்.

திரையிடும் போதுதான் உண்மையாகவே இது எப்படி நடக்கப் போகிறது. எப்படி அவர்கள் பேசப் போகின்றார்கள், என்ன என்ன விடயம் எல்லாம் தேவை என்பது எங்களுக்கு ஓரளவு தெரிய ஆரம்பித்தது. பொறுப்பு மிக அதிகம் என்பதும் புரிய ஆரம்பித்தது. ஆங்கிலத்திலே பேசுவதை தமிழிலோ சிங்களத்திலோ மொழி பெயர்ப்பது ஒன்று.

ஆனால் மறு பக்கத்திலோ அமெரிக்கன் ஆங்கிலம் என்று சொல்லப்படுகின்ற அமெரிக்கர்கள் பேசுகின்ற முறையும் ஆங்கிலத்தையே அவர்கள் பேசினாலும் அதை உச்சரிக்கும் முறையும் இந்த மாதிரியான வான்வெளிப் பிரயாணத்திற்கான சேவையிலே இருக்கின்ற அந்தத் திட்டத்திலே வேலை செய்கின்றவர்கள் பேசுகின்ற சொற்பிரயோகங்களும் பிரயோகித்த சொற்களும் வேறுவிதமாக இருந்தன. இதனைப் படங்களைப் பார்த்த பின்தான் நாம் அறிந்தோம்.

சாதாரணமாக பாராளுமன்றத்திலே பேசுகின்ற ஒரு உரையினைத் தமிழிலோ சிங்களத்திலோ கொடுப்பது போன்றதல்ல இது என்று எங்களுக்குத் தெரியும்.

அமெரிக்கர்களின் இந்தப் பேசும் முறை, இவர்கள் பேசும் மொழி அவர்களுடைய ஆங்கில உச்சரிப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக இவ் வான்வெளிக் களங்களிலே என்ன மாதிரியான சொற்களை எல்லாம் பிரயோகிக்கின்றார்கள் என்ன மாதிரியெல்லாம் அது இருக்கும் என்பதெல்லாம் எங்களுக்கு புதிதாக இருந்தது.

ஆனால் எங்களுக்கு அமெரிக்கன் தூதரகம் மிகவும் உதவியாக ஒத்தாசையாக இருந்து அந்தப் படங்களை எங்கள் வசதிப்படி எங்களுக்கு எப்போது தேவையோ அப்போதெல்லாம் போட்டுக் காட்டினார்கள். ஒருவகையில் எங்களுக்குப் பயிற்சியளித்தார்கள் என்றே சொல்லவேண்டும்.

இத்தனை உதவிகளையும் ஒத்தாசை செய்த அவர்கள் இந்நிகழ்ச்சி தரமாக அமைய வேண்டும் மக்களுக்குத் தெளிவாக இவை புரிய வேண்டும் என்பதற்காக எங்களுக்கு உதவியாக மேலும் நான்கு பேரை ஆயத்தம் செய்தார்கள்.

பேராசிரியர் குலரத்தினம் , இவர் புவியியல் பேராசிரியராக சர்வகலா சாலையிலே இருந்தவர்.

பேராசிரியர் ஏ.டபிள்யூ. மயில்வாகனம், இவர் பௌதிகவியல் பேராசிரியராக இருந்தவர். ஆனந்த சிவம் என்று ஒரு இளைஞர், அவர் ஒரு விஞ்ஞானி .

திரு. கோபால பிள்ளை மகாதேவா என்ற ஒரு விஞ்ஞானி

இப்படியாக ....நான்கு பேரை அவர்கள் ஆயத்தம் செய்திருந்தார்கள். எங்களுக்கும் சற்று ஓய்வு கொடுப்பதற்காக இப்படியான ஏற்பாட்டை அவர்கள் செய்திருந்தார்கள்.

இதே போல சிங்களத்திலும் அல்பிரட் பெரேராவுக்கும் இதே மாதிரியான ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருந்தார்கள்.

எங்கள் ஒலிபரப்பு எத்தகைய வெற்றியைப் பெற்றது ? என்பதற்கு சான்றாக சில விஷயங்களைச் சொல்ல நினைக்கின்றேன்.

சந்திர மண்டலப் பிரயாணம் தொடர்பான இந்த ஒலிபரப்பை ஆல் இந்தியா ரேடியோ எங்களைப் போல வர்ணனையாகத் தரவில்லை என்பதாலும், தமிழிலே அது தொடர்பான எந்த நிகழ்ச்சியும் இருக்கவில்லை என்பதாலும் எமது நிகழ்ச்சிக்கு தென்னிந்திய நேயர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

முன்பின் தெரியாதவர்கள் கூட ..... கிட்டதட்ட லட்சம் பேர் என்று சொல்லலாம் ..... அவ்வளவு கடிதங்கள் வந்தன.

ஒரு நாள் நான் இலங்கை வானொலி நிலையத்திற்குப் போயிருந்தபோது திரு. நெவில் ஜெயவீர என்னை அழைத்தார்.

அவர் மெல்லியதொரு புன்முறுவலுடன் தனது உதவியாளரைக் கூப்பிட்டு அந்தச் சாவியை எடுத்துவரச் சொன்னார். என்னையும் கூட்டிக்கொண்டு அவருடைய காரியாலயத்திற்குப் பக்கத்திலே இருந்த ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்று அதைத் திறக்கச் சொன்னார். ஒரு சிறிய அறை அது.

கதவைத் திறந்ததும் அதற்குள் ஆயிரக்கணக்கான கடிதங்கள் அப்படியே குவிந்து வீழ்ந்தன.


என்னைக் கட்டித்தழுவி இவைதான் உமக்கும் எங்களுக்கும் கிடைத்த பரிசு என்றார் பெருமையாக.

அன்றைய அமெரிக்க ஜனாதிபதி இலங்கை வானொலியின் இந்தச் சேவையைப் பாராட்டி அல்பிரட் பெரேராவுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் தமது கைப்பட கடிதங்கள் எழுதியிருந்தார். கூடவே அமெரிக்க வரலாறு தொடர்பான ஆங்கில நூல் ஒன்றும் ஜனாதிபதியின் கையெழுத்துடன் அன்பளிப்பாக இணைக்கப்பட்டிருந்தது.

இதற்குப் பின்னர் எனது நண்பர்கள் கூட என்னை அப்போலோ சுந்தா என அழைக்கத் துவங்கினர். எனது வாழ்க்கையிலே எனக்குக் கிடைத்த பெரும் பாராட்டாக இதை நான் கருதுகிறேன்.

வானொலி அறிவிப்பாளர் வரகுணன் பதில்கள்


வானொலி அறிவிப்பாளர் வரகுணன் பதில்கள்
-------------------------------------------------------------



ஆர். மாதவி, குடந்தை.

பெண் என்பவள் புதுக்கவிதையா? மரபுக் கவிதையா?

பெண் அனைத்துத் துறைகளிலும் சுடர்விடும் போது அவள் புதுக் கவிதையாகிறாள்.
நம் நாட்டின் கலாச்சாரப் பெருமையினைக் கட்டிக் காக்கும் போது அவள் மரபுக் கவிதையாகிறாள்.

கே.ஆர். உதயகுமார், சென்னை.

வெளிநாட்டைப் போல நம் நாடும் எப்போது வியக்கத்தக்கதாக மாறும்?

சென்னைக்கு வந்திருந்த இத்தாலிய நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு மகாபலிபுரம் சென்றிருந்தேன். போகும் வழியில் வேர்க்கடலை வாங்கி கொறித்துக் கொண்டு சென்றோம். வேர்க்கடலை தீர்ந்தவுடன் கையிலிருந்த காகிதத்தைக் கசக்கி ஜன்னல் வழியே வீசிவிட்டேன்.

மகாபலிபுரம் வந்த பின்னர் தான் கவனித்தேன். மற்ற அனைவரும் வேர்க்கடலை மடித்த காகிதத்தை கையிலேயே வைத்திருந்தார்கள்.
ஒருவர் அவற்றை எல்லாம் ஒன்றாக வாங்கி சற்றுத் தள்ளியிருந்த குப்பைத் தொட்டிக்குச் சென்று போட்டுவிட்டு வந்தார்.

என் கன்னத்தில் யாரோ ஓங்கி அறைவது போல இருந்தது.

எப்போது நம் நாட்டை நாம் மனத்தாலும் செயலினாலும் நேசிக்க ஆரம்பிக்கின்றோமோ அப்போது தான் நீங்கள் குறிப்பிட்ட அந்த மாற்றம் உருவாக ஆரம்பிக்கும் உதயகுமார்.

எல்.எம். சீதாமகன், மதுரை - 10.

புகழ் என்பது போதையா?

போதைப் பொருளுக்கு அடிமையானவன் அதிலிருந்து மீண்டு வர எவ்வளவு சிரமப்படுகிறான். தன்னைச் சுற்றி ஒரு உலகைச் சிருஷ்டித்து அதிலே ராஜாங்கம் நடத்துகிறான். அதிலிருந்து வெளிவர அவன் விரும்புவதில்லை.
குறிப்பிட்ட தருணங்களில் போதை இறங்கும் போது அதற்கு ஈடு செய்ய மேலும் மேலும் தவறுகளைச் செய்கின்றான். இன்பத்தை எதிர்பார்த்து அதற்கு அடிமையாகி விடுகிறான். வாழ்க்கையை அழித்துக் கொள்கிறான்.

புகழ் என்பதும் முதலில் இன்பத்தைக் கொடுத்தாலும் - ஒரு மனிதனை அழிவுப்பாதை வரை கொண்டு வந்து சேர்த்துவிடும் என்பதால் புகழ் என்பதும் ஒரு போதையே.

தளபதி சூர்யா இளைய குமாரன், சென்னை - 7

வாழ்க்கையை ஒருவன் சீரான பாதையில் நடத்திச் செல்ல அவனுக்கு தேவையானது நா -நயமா அல்லது நாணயமா ?

உள்ளத்தில் உண்மையொளி உண்டானால் வாக்கினில் ஒளி உண்டாகும் என்பது பாரதியின் வாக்கு.
வாழ்க்கையில் துணையாக வருவது நாணயம் மிக்க நா நயம்.

திருமதி நீல . முத்துலக்குமி, திண்டுக்கல்

ஒரு பக்கம் பெண்கள் ஆண்டு, பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்று பேசிக்கொண்டு மறு பக்கம் பெண்ணை அடக்கி ஆண்டு வரும் ஆண்களின் மத்தியில் உண்மையான சுதந்திரம் பெண்ணுக்கு எப்போதுதான் கிடைக்கும் ?

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன் தோன்றியது மாமியார் மருமகள் சண்டை.
மாமனார் மருமகன் சண்டை போட்டார்கள் என்று எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
நிச்சயமாக பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும்.
பெண்களிடமிருந்து .
பெண்ணின் முதல் எதிரி பெண்தான். ஆண் அல்ல .

இளமையில் வறுமை - முதுமையில் நோய் ...... இதில் கொடியது எது ?

போதுமென்ற மனமும், புரிந்து கொள்ளும் குணமும் கொண்ட மனைவி வாய்த்தவனுக்கு இளமையில் வறுமை இன்பமே.
அன்பும், அரவணைப்பும், தியாக உள்ளமும் கொண்ட மருமகள் வாய்த்தவர்களுக்கு முதுமையில் நோய் ஒரு பொருட்டா என்ன?
மொத்தத்தில் வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் அனைத்துமே பெண்களின் கைகளில் தான் உள்ளன.

திருமதி வசந்தா, திருச்சி

பிரச்சினையே வாழ்வாகும் போது என்ன செய்வது?

சின்னஞ்சிறிய கல் ஒன்றை எடுத்து கண்ணருகில் வைத்து பாருங்கள். அது உலகத்தையே மறைத்து விடும் .

ஆனால்..அந்தக் கல்லையே தூரக் கொண்டு போய் பாருங்கள்.எதையுமே அதனால் மறைக்க முடியாது.

அது போலத் தான்...

வாழ்க்கையில் பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.

ஆனால் ..... அதைத் தூரக்கொண்டு போனால் தூக்கி எறிந்து
அவற்றை பிரச்சினைகளாகப் பார்க்காமல் சவால்களாக மாற்றிவிட்டால் நாம் சாதனைகள் படைக்கலாம்.

[டாக்டர் வரகுணன் தற்போது கனடாவில் வசிக்கிறார்.]

கே.எஸ். பாலச்சந்திரன் .... ஒரு சுயம்பு - பி.எச். அப்துல் ஹமீது




- பி.எச். அப்துல் ஹமீது

கே.எ°. பாலச்சந்திரன் அவர்கள் என் இனிய நண்பர். சிறந்த படைப்பாளி. நல்ல நடிகர்.

அவரை ஒரு சுயம்பு என்று தான் நான் சொல்வேன்.

ஒரு சிறந்த படைப்பாளியாக அவர் எழுதிய நாடகங்களை நெறிப்படுத்தக் கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

குறிப்பாக அவரின் கிராமத்துக் கனவுகள் என்ற நாடகத்தை நான் வானொலிக்காகத் தயாரித்தேன்.

அந்த நாடகத்தை கேட்டவர்களின் மனத்திரைகளில் ஒரு திரைப்படத்தை அவர்கள் உருவகிக்கக்கூடிய அளவுக்கு கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் எழுத்து உயிரோட்டமானதாக .... உணர்வுபூர்வமானதாக அமைந்திருந்தது.

நகைச்சுவை நடிப்பிலும் சோபித்து விளங்குபவர்கள் சோகத்தை வெளிப்படுத்தும் படைப்பாற்றலிலும் இவரைப் போல் சோபித்துக் கொண்டு வேறு எவராது இருக்கின்றார்களா? என்று கேட்டால்..... இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு அற்புதமான திறமைகளைக் கொண்ட உன்னதமான ஒரு கலைஞர் இவர்.


சமீபத்தில் அவரைப் பெருமைப் படுத்தக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்காக மிகவும் சந்தோஷப்பட்டேன்.

தெனாலி படத்தில் கமல் அவர்கள் நடித்துக் கொண்டிருந்த போது கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் கிராமத்துக் கனவுகள் என்ற வானொலி நாடகத்தின் ஒலி நாடாவையும் கமலிடம் கொடுத்திருந்தேன்.

கமல் அவர்கள் குறிப்பாக அந்த கிராமத்துக் கனவுகள் என்ற நாடகம் யார் எழுதியது? அது என்னை மிகவும் பாதித்தது என்று சொன்னார். நான் திரு. கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் பெயரை பெருமிதம் பொங்கச் சொன்னேன்.

தெனாலி படப்பிடிப்பு முடிவடைந்தபின் கமல் அவர்கள் கனடா சென்றிருந்தபோது டி.வி. சிலோன் என்ற தொலைக்காட்சிக்காக அவரை கே.எஸ். பாலச்சந்திரன் அவர்கள் பேட்டிகாண வந்திருந்த போது அவர் யார் என்று அறியாமலேயே கமல் அவர்கள் கிராமத்துக் கனவுகள் விஷயத்தைச் சொன்னபோது பாலச்சந்திரன் நெகிழ்ந்து விட்டாராம்.

கே.எஸ். பாலச்சந்திரன் என்ற ஒரு சிறந்த கலைஞனை .... கமல் என்ற ஒரு இமய நடிகருக்கு அறிமுகப்படுத்தக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை .... என் நண்பருக்கு என்னால் செய்யமுடிந்த சிறு தொண்டாகக் கருதுகிறேன்.

பின்பு .... தெனாலி வெள்ளிவிழா மேடையில் திரு. கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களைப் பற்றி கமல் பேசியதை எல்லாம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அதைக் கேட்க எனக்கு அளவற்ற ஆனந்தமும், பெருமையுமாக இருந்தது.

என் இனிய நண்பர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் கலைப்பயணம் மேலும் சிறப்படையவும், என்றென்றும் பரிபூரண உடல் நலத்துடன் அவர் உற்சாகமாக செயல்படவும் நம் எல்லோருக்கும் பொதுவான இறைவனை வணங்குகிறேன்.

பேட்டி - உதயா

திரு.கே.எஸ். பாலச்சந்திரன்.அவர்களின் இணையத்தளம்.

http://balachandran.homestead.com/home.html

'வானொலி அண்ணா' என்.ஜி.ஞானப்பிரகாசம்

சொல்லிலே கலை வண்ணம் காட்டும் பல்கலை வித்தகர் என்.சி.ஞானப்பிரகாசம் அவர்கள், சினிமா நேரம் நிகழ்ச்சி தயாரிப்பாளர். நாடறிந்த எழுத்தாளர்.
வானொலி அண்ணாவாக பிஞ்சு நெஞ்சங்களில் அறிவு தீபம் ஏற்றியவர்.
பாடகர். நகைச்சுவை கலைஞர். எல்லாப் பின்னணிப் பாடகர்களின் குரலையும் தன் குரலில் வைத்திருப்பவர்.
திருப்புமுனை படத்தின் முலம் நல்ல நடிகராகவும் தம்மை இனங்காட்டியவர்.பத்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளவர்.
நுகர்வோர் இயக்கத்தில் ஈடுபாடு உள்ளவர்.
நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்திற்குச் சென்று அங்கு நடைபெற்ற வழக்குகளைக் கேட்டறிந்து.... அந்த வழக்கின் விபரங்களை சிறந்த நாடகமாக்கி ஒலிபரப்பி... வானொலி மூலம் நுகர்வோர் விழிப்புணர்வை வளர்த்தவர்.
நுகர்வோர் உரிமைகள்உண்மைச் சம்பவங்கள் என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார். இவர் எழுதிய குழந்தைகள் நூலுக்கும், நுகர்வோர் நூலுக்கும் அரசு பரிசு கொடுத்துப் பாராட்டியதுடன், பள்ளிக்கூட மாணவர்களுக்கான துணைப்பாடத்தில் தந்தை பெரியார் பற்றிய இவரின் சிறப்புக் கதை இடம் பெற்றுள்ளது.
எம்மதமும் சம்மதம் என்ற கருத்து கொண்ட ஞானபிரகாசத்துக்குப் பிடித்தது மனிதர்களை நேசிப்பது. திறமை எங்கிருந்தாலும் தேடிச்சென்று தட்டிக் கொடுத்து வளர்க்கும்தாயுள்ளம் கொண்டவர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மக்கள் அதிகம் விரும்பி பார்த்தனர். இதனால் வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கை....விரல் விட்டுச் சொல்கின்ற அளவுக்கு வீழ்ந்தது. ஆனால்... சமீப காலங்களில் ஆச்சரியப்படத்தக்க வகையில் வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிகளின் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கிறது. இந்த மன மாற்றத்திற்கு என்ன காரணம்?.
தொலைக்காட்சி வந்த புதிதில்... மக்கள் அதில் மயங்கினர். மனதைப் பறிகொடுத்தார்கள். வானொலியை மறந்தார்கள். காலப்போக்கில் டீ. வி. நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் சலிப்பை கொடுத்தன. எந்தச் சேனலைத் திறந்தாலும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள். சினிமாத் தனமான, ஆபாசமான, கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தும் சமூகப் பொறுப்புணர்வு துளியும் இல்லாதவியாபார வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து பார்த்து வெறுப்பே மிஞ்சியது. யாராவது நல்ல விஷயங்களை சொல்ல மாட்டார்களா? என்ற ஏக்கமும் தாகமும் அவர்களுக்கு ஏற்பட்ட போது மீண்டும் வானொலி தனது சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டது.
ஒரு மனிதனின் வாழ்வில் நடைபெறும் முக்கியமான எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பொறுப்பு வகிப்பவர் தாய். அந்த தாய் தான் வானொலி.
ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் வானொலி பற்றிய நம்பகத்தன்மை குறைந்திருந்தது. இதை ஏற்பீர்களா?

நிச்சயமாக ஒரு கால கட்டத்தில்வானொலி உலகில் அரசு யந்திரங்களின் ஆக்கிரமிப்பு நிலவியது உண்மைதான். அப்போது... அரசு என்றாலே எழுதப்படாத சட்டம் "ஆமாம் சாமி " போடுவது. அதனால்தான் மக்கள் மத்தியில் வானொலி பற்றிய நம்பகத்தன்மை குறைவாக இருந்தது. ஊரில் காலரா வந்தால் கூட இறந்தவர்களின் எண்ணிக்கையை அதிகமாகக் சொல்லக்கூடாது என்று அரசு கேட்டுக்கொள்ளும். காலரா வந்தால் கூட ஜால்ரா போட வேண்டிய நிலைமை.
வானொலி உலகில் நீங்கள் மனம் திறந்து பெருமிதப் படும் விஷயம்?
வானொலியில் ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து ஒலிபரப்பாகிறது என்று வைத்துக் கொள்வோம். அது ஒலிபரப்பாக ஆரம்பித்து 6 மாதங்களில் அல்லது ஒரு வருடத்தில் அந்த நிகழ்ச்சியில் மாற்றங்கள் செய்யப்படலாம். அல்லது அந்த நிகழ்ச்சிக்கு கட்டாய ஓய்வு கொடுப்பர்.
ஆனால்... ‘ இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சி அதற்கெல்லாம் விதிவிலக்காக திகழ்ந்து சரித்திரத்தையே மாற்றி அமைத்தது. வானொலி உலகில் தமிழகம் முழுவதும் தனக்கென்று தனி இடத்தைப் பெற்று தக்க வைத்துக் கொண்டிருப்பவர் தென் கச்சி. கோ. சுவாமிநாதன் அவர்கள். அவர்தான் வானொலியின் சூப்பர் °டார்.
(ஒரு சூப்பர் °டார் என்பவர் இருந்தால் ஒரு சுப்ரீம் °டார் என்றும் ஒருவர் இருப்பார் அல்லவா?... அது தான் ‘சினிமா நேரம்’ நிகழ்ச்சி அமைப்பாளர் என். சி. ஞானப்பிரகாசம் அவர்கள் )
சென்iனை மாநகர பண்பலை வரிசையில் ‘சினிமா நேரம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சூழ்நிலை எப்படி உருவானது ?
2000ஆண்டில் ஜீன் மாதம் வானொலி இயக்குநர் திரு. பி. ஆர். குமார் அவர்கள் என்னை அழைத்து "பண்பலை வரிசையில் காலை ஒரு மணி நேர; சினிமா சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை செய்யும்படி சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டதும் ஒரு பக்கம் மகிழ்ச்சி. மறுபக்கம் மருட்சி! ஏனென்றால், சினிமாவில் நடித்து... பாடி... புகழ் பெற வேண்டும் என்ற ஆதங்கத்தால்தான் நான் சென்னைக்கு வந்தேன். ஆனால் அது எட்டாத
வானத்தில் கிட்டாத நிலவாக இருந்தது. எப்படியாவது கிட்டாத நிலவை பிடித்துக் கிள்ளுவது இயலாத காரியம் என்பதை புரிந்து கொண்ட நான் வானொலி உலகில் நுழைந்தேன்.
பொதுவாக தீபாவளி, பொங்கல், புதுவருடம் போன்ற பண்டிகை நாட்களில் திரைக் கலைஞர்களை நிலையத்துக்கு வரவழைத்து அவர்களுடன் "சிறப்பு விருந்தினர் சந்திப்பு" நடக்கும். நினைவு தெரிந்த நாளாக சென்னை வானொலி நிலையத்தில் இப்படித்தான் நடந்து கொண்டிருந்தது.
தினமும் சினிமாக் கலைஞர்களை நிலையத்திற்கு வரவழைத்து நிகழ்ச்சியை வழங்குமாறு நிலைய இயக்குனர் கட்டளை இட்டதும் மகிழ்ச்சி ஒரு பக்கம், மருட்சி ஒரு பக்கம்.
சினிமாக் கலைஞர்களை பிடிப்பது என்பது குதிரைக்குக் கொம்பு முளைப்பது போன்றது. அத்தைக்கு மீசை முளைப்பது போன்றது. பசியோடு இருந்தாலும் பிசியென்று சொல்லிக் கொள்ளும் பண்புள்ள கலைஞர்கள். இப்படிப் பட்டவர்களை வைத்துக்கொண்டு எப்படி செயலாற்றுவது என்று மூளையை கசக்கத் தொடங்கினேன். முன்னணிக் கலைஞர்கள் பின்னால் ஓடியோடி அசதி ஏற்பட்டு அலுவலகம் போகாமல் ஆ°பத்திரிக்குப் போவதைவிட; திரையுலகின் பின்னணிக்கலைஞர்களின் கனவுகளையும்,
கலையாத கலை ஆர்வங்களையும், தாகத்தையும், ஏக்கங்களையும் குமுறல்களையும், கொந்தளிப்புகளையும், அனுபவப் பதிவுகளையும், பாடங்களையும் சுவைபடச் சொல்லும் விதத்தில் வித்தியாசமாக நிகழ்ச்சியை அமைத்தால் என்ன என்று ஒரு தீப்பொறி !
எனது எண்ணமும், இலக்கும், உழைப்பும் முழுநிறைவான பலனைத் தந்தது. அதற்குப் பிறகு திரை உலகில் இருக்கும் ஏறக்குறைய 26 பிரிவுகளிலும் உள்ள பல கலைஞர்கள் ‘சினிமா நேரம்’ நிகழ்ச்சிக்கு பெருமையுடன் வந்து கலந்து கொள்கிறார்கள். கதாநாயகன், கதாநாயகி, கதாசிரியர், வசனகர்த்தா, எடிட்டர், பாடகர், இசையமைப்பாளர்.... என தினமும் ஒரு கலைஞர் வருகை தந்து நேரடி ஒலிபரப்பில் கலந்து கொள்கின்றனர்.
நட்சத்திரங்கள் ஸ்ரீவித்யா, ஸ்ரீப்ரியா, தலைவாசல் விஜய், அஜய்ரத்னம், மதன்பாப், இயக்குனர்கள் - ஏ.சி.திருலோகச்சந்தர், எ°.பி. முத்துராமன், பாரதிகண்ணன் மற்றும் பலர் ‘சினிமா நேரம்’ நிகழ்ச்சியில் கலந்து
கொண்டிருக்கிறார்கள்
‘சினிமா நேரம்’.... எப்படி வி.ஐ.பி. நேரமாகவும் தன்னை ஆக்கிக்கொண்டது?
திரைப்படங்களால் வி.ஐ.பிக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதோ இல்லையோ..திரைப்பட ப் பாடல்களால் ஏதேனும் ஒரு நிலையில்... எங்கேனும் ஒரு சம்பவத்தால்அவர்கள் மனது ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். அந்த ஊஞ்சலாடிய நினைவுகளை நேயர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று, நாம் வேண்டுகோள் விடுத்தபோது....‘சினிமா நேரம்’ வி.ஐ.பி. நேரமாகவும் மாறியது.
சினிமா நேர நிகழ்ச்சியில்... உங்களால் மறக்க முடியாத சம்பவங்கள்?
நிறைய உண்டு. 17-1-2001 அன்று எம்.ஜி. ஆர். அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்றைய ‘சினிமா நேரம்’ நிகழ்ச்சியை சிறப்பு நிகழ்ச்சியாக புதுமையாகவும் சிறப்பாகவும் வழங்கினோம்.
எந்த விதத்தில் அந்த நிகழ்ச்சி புதுமையாக இருந்தது?
எம்.ஜி.ஆர். அவர்களைப் பேட்டி காண்பது போல அந்த நிகழ்ச்சியை நாம் அமைத்திருந்தோம். எம்.ஜி.ஆர். ஆற்றிய சொற்பொழிவுகளில் இருந்து முக்கியமான பகுதிகளை பிரித்தெடுத்து... அதற்குப் பொருத்தமான கேள்விகளை உருவாக்கி... அந்த நிகழ்ச்சியை மிகுந்த பிரயாசையுடன் உருவாக்கினோம். உண்மையாகவே எம.ஜி.ஆரை நீங்கள் பேட்டி கண்டது போல் நிகழ்ச்சி யதார்த்தமாகவும், இயல்பாகவும் இருந்தது என்று ஆயிரக்கணக்கான நேயர்கள் பாராட்டிய போது மனதுக்கு நிறைவாக இருந்தது என்றார் என்.சி.ஞானப்பிரகாசம் அவர்கள்.
இவர் 17-1-2001 அன்று மிகவும் நேர்த்தியாகவும் சுவையாகவும் தயாரித்துவழங்கிய எம்.ஜி.ஆர். பேட்டி பற்றி இவரை சிறப்பு பேட்டி கண்டு மூன்று பக்க அளவில் கட்டுரையாக வெளியிட்டு என்.சி.ஞானப்பிரகாசம் அவர்களின் தனித்துவ கலைத் திறனையும், வானொலி வித்தகத்தையும் பாராட்டியுள்ளது 25-2-2001 தேதியிட்ட ‘கல்கி’ பத்திரிகை. செவ்வி கண்டவர் ‘சாவி’ ராணிமைந்தன்.
ஏழிசை அரசர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் குறிப்பிட்டது போல் ஞானத்தோடு கேள்வி கேட்டு... ஞானத்தோடு நிகழ்ச்சிகளை இனிய கானத்கோடு தொகுத்து வழங்கும் வானொலி சுப்ரீம் °டார் அவர்களின் கலைத்தொண்டு மேன்மேலும் சிறக்க ......